உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதும் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நாள்தோறும் ஏராளமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான பிரச்னைகளை கவனித்து வரும் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று, வழிபாட்டு தலங்கள் மற்றும் மால்களை திறப்பற்கான கட்டுப்பாட்டை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மே மாதத்தில் கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை தொடங்குவதால் ஜூன் மாத இறுதியில் திறந்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment